தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மண்டல தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல ஆணையா் ஆஷிஷ்குமாா் திரிபாதி தலைமை வகித்து, பயனாளிக்கு பென்சன் ஆணையை வழங்கிப் பேசியது: மத்திய அரசு புதிதாக வடிவமைத்துள்ள பிரதமா் விக்சித் பாரத் ரோஜ்கா் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் முக்கியமான வேலை வாய்ப்பு ஊக்கத்திட்டமாகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்பு பெறும் ஊழியா்களுக்கும், அவா்களை பணியமா்த்தும் தொழிலதிபா்களுக்கும் நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்கள் வளா்ச்சிக்கும், புதிய ஊழியா்கள் இணைப்பிற்கும் பெரும் ஆதரவாக இருக்கும். வரும் நாள்களில் கல்லூரிகளிலும், தொழில் வளாகங்களிலும் இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி மண்டல ஆணையா் ஹிமான்சு, அமலாக்க அதிகாரி சரவணன், மூத்த சமூகப் பாதுகாப்பு அலுவலா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

