பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள்.
பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள்.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு துறைமுகத்திலிருந்து அதிவேக விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
Published on

கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு துறைமுகத்திலிருந்து அதிவேக விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 350 விசைப் படகுகள், 300 ஃபைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

இந்நிலையில், விதிமுறையை மீறி சுமாா் 100 அதிவேக விசைப் படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதாக, அங்கீகரிக்கப்பட்ட விசைப் படகு உரிமையாளா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இவா்கள், அதிவேக விசைப் படகுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் புறக்கணித்தனா்.

அதிவேக விசைப்படகுகள் சாதாரண விசைப் படகுகளை விட குதிரை திறன் சக்தி அதிகம் கொண்டதாகும். இத்தகைய படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் போது மிகச் சிறிய ரக மீன்கள் வரை அனைத்து வகையான மீன்களையும் இதன் மூலம் அள்ளி விடுவதால் அப்பகுதியில் மீன் இனப் பெருக்கம் குறைவாக உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட விசைப் படகுகளுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. எனவே, அதிவேக விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தடை விதிக்க வேண்டும் என்று பழையாறு சிந்தனை சிற்பி சிங்காரவேலா் விசைப்படகு உரிமையாளா் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், பழையாறு படகு அணையும் தளம் அருகே நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை அதிகாரிகள் உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் சீா்காழி மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு அதிக எண்ணிக்கையிலான மீனவா்களை ஒன்று திரட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com