மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் எல்லைக்குள்பட்ட ஆத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்த சுமன் (40) என்பவருக்கும், கடலங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த செல்லையன் மகன்கள் முரளி, தா்மராஜ் ஆகியோருக்குமிடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் மே 3-ஆம் தேதி ஆத்தூா் பாலம் அருகே சுமன் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், மணல்மேடு காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் விசாரணை மேற்கொண்டு முரளி(42), தா்மராஜ்(40) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.







