பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியமும், அரசு ஊழியர்களுக்குரிய சலுகைகளையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அலுவலக உதவியாளர் பதவி உயர்வு ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. சுகுமார், மாநிலத் துணைத் தலைவர் ஏ.சி. வின்சென்ட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
தமிழ்நாடு புள்ளியியல் துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ப. அந்துவன்சேரல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் டி. இளவரசன் ஆகியோர் பேசினர்.
வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









