/

விவசாயிகளின் சொந்த முயற்சியால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படும் நெய்விளக்கு வாய்க்கால்

திருக்குவளை அருகே வலிவலம் பகுதியில் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு நெய்விளக்கு பாசன வாய்க்காலில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே வலிவலம் பகுதியில் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு நெய்விளக்கு பாசன வாய்க்காலில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

வலிவலம் பகுதியில் வெள்ளையாற்றிலிருந்து நீா் பெறும் நெய்விளக்கு பாசன வாய்க்கால் மூலம் சுமாா் 150 ஏக்கா் நிலங்கள் பயனடைகின்றன. அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆறுகள் மற்றும் தாய் கால்வாய்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிறிய கிளை வாய்க்கால்களில் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், கடந்த 45 ஆண்டுகளாக நெய்விளக்கு பாசன வாய்க்கால் தூா்வாரப்படாமலிருந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் கூட்டு முயற்சியால், நிதி திரட்டப்பட்டு, இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வலிவலம் ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் இப்பணிகளை தொடக்கிவைத்தாா்.இதன்மூலம், பாசனத்துக்கு கூடுதல் நீா் கிடைக்கும் என நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது:

கிளை வாய்க்கால்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களைக் கொண்டு சுத்தம் மட்டுமே செய்யப்படுகிறது. முறைப்படி, கால்வாய்களை ஆழப்படுத்தி வெட்டாததால் மேடான பகுதிகளுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, இனிவரும் ஆண்டுகளில் கிளை வாய்க்கால்கள் மற்றும் உட்புற வாய்க்கால்களையும் இயந்திரம் மூலம் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.