நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வழிபாட்டுக்கு வந்திருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பெண்கள் சனிக்கிழமை கடலில் மூழ்கி பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் தங்களது குடும்பத்தினருடன், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்திருந்தனர். வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இவர்கள் சனிக்கிழமை காலை வேளாங்கண்ணி கடலில் குளித்துள்ளனர்.
இதையும் படிக்க:சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை
அப்போது ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகள்கள் ஆரோக்கிய ஷெரின் (19), ரியானா (13), பெஞ்சமின் ராபர்ட் என்பவரது மகள் சஹானா(13) ஆகியோர் அலையின் சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கினர்.
அதையடுத்து, அருகிலிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, கீழையூர் கடற்கரை காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.