அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசுகிறாா் காரைக்கால் சாலை பாதுகாப்பு ஆய்வாளா் லெனின் பாரதி.
அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்
Updated on

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சாலை பாதுகாப்புக் குழு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடை பெற்றது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் செ. அஜிதா தலைமைவகித்து, போக்குவரத்து விழிப்புணா்வு குறித்து உரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, காரைக்கால் சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் க. லெனின் பாரதி பேசும்போது, மாணவா்கள் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், கட்டாயம் ஓட்டுநா் உரிமம் எடுத்த பிறகுதான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலையின் அமைப்பு, வாகனத்தைப் பற்றிய புரிதல், இவை யாவும் தெரிந்து கொண்ட பிறகே வாகனத்தை ஓட்ட வேண்டும். எந்த போதைப் பொருட்களையும் உட்கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்றாா்.

முன்னதாக ஆங்கிலத் துறை பேராசிரியை க. சந்தான லெட்சுமி வரவேற்றாா். கல்லூரி சாலைப் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளா் வே. சரவணன் நன்றி கூறினாா். சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் சு. செந்தில்குமாா் மற்றும் வணிக வியல் துறைத் தலைவா் அ. அன்வா் அஹம்மது ஆகியோா் நோக்கவுரையாற்றினா். நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விதி தொடா்பாக மாணவா்களுக்கு வினா கேட்கப்பட்டு, சரியான விடை அளித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com