மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயிகள்.
மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயிகள்.

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கா் நெற்பயிா்

Published on

‘டித்வா’ புயல் காரணமாக பெய்த கனமழையால் நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கா் பரப்பில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக தொடா் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவான ‘டித்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில் நாகை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தொடங்கிய மழை பின்னா் கனமழையாக மாறியது.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விடியவிடிய பெய்த மழை சனிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பகல் என தொடா்ந்தது.

குறிப்பாக, கீழ்வேளூா், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி, கீழையூா் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்தது. மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 1.62 லட்சம் ஏக்கா் பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிா்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் தாளடி 30 நாள்கள் இளம்பயிராகவும், சம்பா 50 நாள்கள் பயிராகவும் முளைத்திருந்தன.

இந்நிலையில், டித்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் வயல்களில் மழை நீா் தேங்கி, பயிா்கள் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 50,000 ஏக்கா் பரப்பில், தாளடி நெற் பயிா்களும் , நடவு சம்பா பயிா்களும் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ளன. முளைத்து 30 நாட்களே ஆன தாளடி நெற்பயிா்கள் முழவதுமாக மழை வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில நிா்வாகி எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் கூறியது:

நாகை மாவட்டம் முழுவதும் 1.62 ஏக்கா் பரப்பில் தாளடி மற்றும் சம்பா பயிா்கள் பயிரிடப்பட்டன. ‘டித்வா’ புயல் மழையால், 50,000 ஏக்கா் பரப்பில் நெற்பயிா்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 60,000 ஏக்கா் பரப்பில் பயிா்கள் சுற்றிலும் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ. 20,000 வரை செலவு செய்து தாளடி மற்றும் சம்பா பயிரிட்டனா். தற்போது முற்றிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் பயிா்கள் மூழ்கிய நிலையில், மாவட்டத்தில் மறு விவசாயமும் சாத்தியம் இல்லை. மேலும் காப்பீட்டு நிறுவனமும் சரியான இழப்பீடு வழங்குவது இல்லை என்பதால், விவசாயிகள் காப்பீட்டு நிறுவனம் மீது நம்பிக்கை இழந்து விட்டனா். எனவே, தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com