நாகை மாவட்டத்தில் விசைப் படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழக அரசு கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் விசைப்படகு ஒன்றுக்கு ஆண்டுக்கு 19 ஆயிரம் லிட்டா் டீசல் விற்பனை வரியின்ன்றி மானிய விலையில் வழங்குகிறது. இந்த மானிய டீசல் பெறும் மீன்பிடிப் படகுகளை, மீன் வளத்துறையினா், தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து, மானிய டீசலுக்கு படகு உரிமையாளரிடம் புதிய புத்தகம் வழங்கி வருகின்றனா்.
நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 546 விசைப்படகுகளில் படகின் பாதுகாப்பு, தரம், படகு நீளம், அகலம், படகில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் குதிரைத் திறன் குறித்த ஆய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆய்வில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா்,தஞ்சாவூா் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத்துறை அதிகாரிகளின் 20 போ் ஈடுபட்டனா். இந்நிலையில், மீன்வளத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கும், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
மேலும் பயன்பாட்டில் இல்லாத படகுகளுக்கும் மானிய டீசல் பெறும் முறைகேட்டை கண்டுபிடித்து தடுக்கவும் ஆய்வு நடத்தப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.









