நாகை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 3 ஆயிரம் மீன்பிடி ஃபைபா் படகுகளில் மீன்வளத்துறையினா் 24 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
நாகை மாவட்டத்தில் நாகை துறைமுகம், நம்பியாா் நகா், கல்லாா், சாமந்தான்பேட்டை, நாகூா் பட்டினச்சேரி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, வேதாரண்யம், நாகூா் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஃபைபா் படகு உரிமையாளா்கள், தங்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றை மீன்வளத்துறையிடம் வழங்கினா்.
மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடா்பு கருவிகள், கடல் பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றையும் மீன்வளத்துறையினா் ஆய்வு செய்தனா். படகுகளில் பதிவு எண்கள் தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும், பதிவு செய்யப்படாத ஃபைபா் படகுகள் விரைவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மீன்வளத்துறையினா் அறிவுறுத்தினா்.
நாகை, தஞ்சாவூா்,திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 24 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.










