தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவில்பத்து ஊராட்சி புதுக்கடை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாகற்காய் சாகுபடி, சேமிப்பு நிதியின்கீழ் ரூ.50.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி, மேலக்காடு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
கோவில்பத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள புயல் பாதுகாப்பு மைய கட்டடம், கீழக்காடு கிராமத்தில் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை, உணவு தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். இதேபோல பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பரிமேளழகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










