மழை,  வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு 10  லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்  குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம்  இழப்பீடு வழங்க  வேண்டும்  என  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சி  கோரிக்கை  விடுத்துள்ளது.
Updated on
1 min read

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்  குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம்  இழப்பீடு வழங்க  வேண்டும்  என  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சி  கோரிக்கை  விடுத்துள்ளது.
   இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலர் வை. செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
      திருவாரூர்  மாவட்டத்தில் சுமார் 1 லட்சம்  ஏக்கர்  அளவுக்கு நெற்பயிர்கள்  நீரால் சூழப்பட்டு, அழுகும் நிலையில்  உள்ளன.  பல ஆறுகளில் தண்ணீல் இல்லாத நிலையில் வாய்க்கால்,  வயல்களில்   மட்டும் தண்ணீர் சூழ்ந்து,   வடிவதற்கு வடிகாலில்லாமல் தேங்கி நிற்கிறது.  ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாகவும், சரியாகவும், காலத்தோடு தூர்வாரியிருந்தால் இதுபோன்ற பாதிப்புகளைத்  தவிர்த்திருக்கலாம். இதன்மூலம்  குடிமராமத்து பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
   திருவாரூர் மாவட்டத்தில் வீடு இடிந்ததாலும், மழையால்  ஏற்பட்ட கடும் குளிராலும் பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை  வருவாய்த் துறையினர் சரியாகவும்,  முறையாகவும் கணக்கெடுத்து  அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
 திருவாரூர்  மாவட்டத்தில் 4  பேர்  உயிரிழந்ததாக  மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது. ஆனால்  மாவட்டம்  முழுவதும்  15- க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களது உயிரிழப்பை வருவாய்த் துறையினர் முறையாக கணக்கெடுத்து அரசுக்கு தெரியப்படுத்தி நிவாரணம்  பெற்றுத்தர வேண்டும்.   
 சென்னை, கொடுங்கையூரில் மின்விபத்தில் உயிரிழந்த  குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என   உயர் நீதிமன்றம்  அளித்துள்ள தீர்ப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் வீடு இடிந்தவர்களுக்கும், வேலைவாய்ப்பை இழந்த விவசாயத்  தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்து குண்டும்,   குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய   நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.  அத்துடன்   திருவாரூர்  மாவட்டத்தில்  பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள  1 லட்சம் ஏக்கருக்கும்   நிவாரணம் வழங்க  வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com