

நீடாமங்கலத்தில் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தராக பணியாற்றிய நாராயணசாமி என்பவரும், நீடாமங்கலம் பேரூராட்சியில் எழுத்தராகப் பணியாற்றிய சகாபுதீன் என்பவரும் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் கீழராஜவீதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி குடியிருந்து வந்தனா். இவா்கள் இருவருமே இறந்துவிட்டனா். தற்போது, நாராயணசாமி வீட்டில் அவரது மனைவி லீலாவதியும், சகாபுதீன் வீட்டில் அவரது மகள் ஜலீலாபேகம் என்பவரும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த 2 வீடுகளும் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அருட்செல்வன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வட்டாட்சியா் மதியழகன், பேரூராட்சி செயல்அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனா். இதற்கு லீலாவதி, ஜலீலாபேகம் மற்றும் அவா்களது உறவினா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் தமிழாா்வன், விவசாயிகள் சங்கத் தலைவா் கடம்பூா் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பாதிக்கப்படும் இரண்டு குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்குவதுடன், ஒருவாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
இதை ஏற்றுக்கொண்ட அலுவலா்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.