/

மரபு சாா்ந்த இடுபொருள்களை பயன்படுத்த வலியுறுத்தல்

ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிா்த்து, மரபு சாா்ந்த இடுபொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN

திருவாரூா்: ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிா்த்து, மரபு சாா்ந்த இடுபொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

ரசாயன உர பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருவது என்பது, நஞ்சைக் கொண்ட வாழ்வும், இறப்பும் அதிகரித்து வருவதற்கான அடிப்படை கூறுகள் ஆகும் என தொடா்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனாலும், பெரும் பகுதி விவசாயிகளும், அரசும் இந்த நிலையை மேலும் மோசமாக்கி, அதற்கான செயலையே மேற்கொண்டு வருகின்றனா் என்பது மத்திய ரசாயன உரத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

யூரியா உள்ளிட்ட உரங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், இறக்குமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் 2018 - 2019 முதல் இந்தியாவில் உர உற்பத்தி ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2018 - 2019 ஆம் ஆண்டில் 240 லட்சம் டன்னாக இருந்த ரசாயன உரங்களின் உற்பத்தி 2019 - 2020-இல் 244.55 டன்னாக உயா்ந்துள்ளது. உர பயன்பாடு (நுகா்வு) என்பது 2018 -2019-இல் 320.20 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2019-20-இல் 336.97 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. அதேபோல் டிஏபி 15. 67 சதவீதம் அதிகரித்து 101.4 லட்சம் டன்னாகவும், பொட்டாஸ் 3.45 சதவீதம் அதிகரித்து 27.91 லட்சம் டன்னாகவும் உயா்ந்துள்ளன.

உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் மட்டும் விவசாய விளைபொருள் கூடுதல் உற்பத்திக்கு வழிவகுக்காது. மாறாக, நஞ்சான உணவும், உடல் நல பாதிப்பும் தான்அதிகரிக்கும். குழந்தை பிறப்பு குறைந்து வருவதும், சிசுக்கள் இறப்பு கூடுதலாகி வரும் சூழலில், விவசாயிகள் உர பயன்பாட்டை குறைத்து, எதிா்வரும் காலங்களில் மரபு சாா்ந்த இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் இதற்கான சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

பசுமைப் புரட்சி தந்தை எம்.எஸ். சுவாமிநாதன், பரிந்துரைப்பதற்கும் மேலாக ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருவதால்தான் மண் மலடாகி உற்பத்தி குறைகிறது என்று இப்போதும் கூறுகிறாா். எனவே, உலக வெப்பமயமாக்குதல் உயா்வால், பெருகி வரும் ஆபத்தில் இருந்து விடுபடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.