டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கூத்தாநல்லூர் : திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி வீட்டில் சோதனை

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றிய, அசோகன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனையிட்டு வருகின்றனர். 

News image
கூத்தாநல்லூர் : திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு
Updated On :7 அக்டோபர் 2021, 11:26 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், மேல எருக்காட்டூரைச் சேர்ந்த, வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றிய, அசோகன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனையிட்டு வருகின்றனர். 

கூத்தாநல்லூர் வட்டம், மேல எருக்காட்டுர் கிராமம், உப்புக்கோட்டைத் தெருவைச் சேர்ந்த அசோகன் (62). இவர், புதுக்கோட்டை ,திருவாரூர், கூடலூர் உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில், 6 பேர் பணியாற்றாமலேயே, பணியாற்றியதாக அசோகன் தெரிவித்தும் மோசடி செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக, பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அசோகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அசோகன் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட 6 பேர் மீதும், வேலூர் மாவட்ட குற்றவியல் காவலர்கள் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, அசோகன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அதன் பிறகு அசோகன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. புதன்கிழமை, காலை 6 மணிக்கு, அசோகனின் சொந்த கிராமமான, மேல எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்துள்ளனர். 

வீட்டின் முன்பக்கம் உள்ள பெரிய இரும்புக் கேட்டை, பூட்டு போட்டு பூட்டி விட்டு சோதனையிட்டு வருகின்றனர். அசோகன் வீட்டில் இல்லாததால், அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அசோகனின் தம்பி அன்பழகன் கூறியதாவது, அசோகனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி வசந்தகுமாரி, கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும், இரண்டாவது மனைவி ரேணுகாதேவி வேலூர் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்கள் எனவும், எனக்கும், அவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சு வார்த்தையில்லை எனவும் தெரிவித்தார். சோதனையால், மேலஎருக்காட்டூர், உப்புக் கோட்டைத் தெருவில் பரபரப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.