மன்னார்குடி: மன்னார்குடியில் குடி போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சியூரை சேர்ந்தவர் விவசாயி மோகன் (55). இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன்(18), அர்ஜுன்(15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
அரவிந்தன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவதாகவும், குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு அரவிந்தன் வந்தபோது, தந்தைக்கும் தாய்க்கும் இடையே சாதாரணமாக குடும்பச் சண்டை நடந்துள்ளது.
இதனை கண்ட அரவிந்தன், குடிபோதையில் அருகில் இருந்த கடப்பாரையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மன்னார்குடி ஊரக காவல்துறையினர் அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.