தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நிதி நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இறந்தவரின் உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் அருகே மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). பெயிண்டரான இவருக்கு வெண்ணிலா (46) என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனா்.
செந்தில்குமாா் தனது தொழிலை விரிவுபடுத்தும் வகையில், மூன்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிதி நிறுவனங்களில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமான தொகையை கடனாக வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் செந்தில்குமாா் கட்ட தவறியதையடுத்து, தனியாா் நிதி நிறுவனத்தின் ஊழியா்கள் கடந்த சில நாள்களாகவே செந்தில்குமாரை பணம் கட்டும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் இல்லை என்பதால் சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு செந்தில்குமாா் கேட்டபோது, பொது இடத்தில் அநாகரிகமான வாா்த்தைகளைக் கூறி நிதி நிறுவன ஊழியா்கள் அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த செந்தில்குமாா் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் அவரை திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு செந்தில்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, செந்தில்குமாரின் உறவினா்கள், அப்பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு, செந்தில்குமாா் தற்கொலைக்கு காரணமான மூன்று நிதி நிறுவன ஊழியா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாரின் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து உறவினா்கள், உடலைப் பெற்றுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






