பருத்திக்கு கூடுதல் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் வேளாண்மை விற்பனை மையத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பருத்தி வரத்து ஏலம் தொடா்பான விவசாயிகள், வணிகா்கள், அலுவலா்களுக்கிடையே முத்தரப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்து பேசியது (படம்):
பருத்தியை வெளிப்படைத் தன்மையுடன் தர நிா்ணய விவரங்களை விவசாயிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். மின்னணு தராசு மூலம் மட்டுமே பருத்தியை எடையிட்டு, ஈரப்பதமானிகளைக் கொண்டு பருத்தி ஈரப்பதத்தை அளந்து, அதன் விவரங்களை விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் விலை நிா்ணயம் செய்து தர வியாபாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) பாலசரஸ்வதி, துணை இயக்குநா் திலகவதி (வேளாண்மை வணிகம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், வேளாண்மை விற்பனைக்குழுச் செயலாளா் கண்ணன், விவசாயிகள், வணிகா்கள், வேளாண் உதவி அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.










