/

அடிப்படை வசதியற்ற கனக துர்கா காலனி

புது தில்லி ஜூன் 22: கழிப்பறை, கழிவுநீர் போக்கி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான வகையில் கிடைக்காமல் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஆர்.கே.புரம் கனகதுர்கா காலனி மக்கள். கனகதுர்கா க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:46 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி ஜூன் 22: கழிப்பறை, கழிவுநீர் போக்கி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான வகையில் கிடைக்காமல் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஆர்.கே.புரம் கனகதுர்கா காலனி மக்கள்.

கனகதுர்கா காலனி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பல ஆண்டுகளாக இங்கு ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் வசித்து வருகின்றன. வட இந்திய மக்களும் கணிசமாக இக்காலனிப் பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில் மிகுந்த மெத்தனப்போக்கு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இக்காலனியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தனியார் நிறுவனங்களிலும், வீடுகளிலும் வேலை செய்து சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெருகிவரும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை என்பது இம்மக்களின் குற்றச்சாட்டு. இப் பிரச்னை தொடர்பாக ஆர்.கே.புரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்க்கா சிங், பாஜக எம்.பி. அஜய் மக்கான் ஆகியோருக்கு மனுக் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து இக்காலனியைச் சேர்ந்தவரும், மக்கள் விழிப்புணர்வு மன்றத் தலைவருமான ஸ்ரீரங்கன் கூறியது: 1979-ம் ஆண்டு முதல் இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு இக்காலனியில் 40 தமிழ்க் குடும்பங்கள் மட்டுமே இருந்தன. இங்கு வசித்தவர்களுக்கு இடம் கிடைக்க உதவியர் மறைந்த சஞ்சய்காந்தி. 1990-ம் ஆண்டுகளில் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தில்லியில் 153 காலனிக்கு அனுமதி கொடுத்தார். எனினும், 2004-ம் ஆண்டில் இந்த இடத்தைக் காலி செய்ய அப்போதைய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகு உத்தரவை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் உத்தரவு விலக்கப்பட்டது. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்றோம். இது ஒருபுறம் என்றால், இப்பகுதியில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாநகராட்சியும், மாநில அரசும் மெத்தனம் காட்டி வருவதுதான் தமிழர்களை வஞ்சிக்கச் செய்வதாக உள்ளது. இப்போது இப்பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசதித்து வருகின்றன. ஆனால் போதிய கழிப்பறை வசதிகளோ, குடிநீர் வசதியோ, கழிவுநீர் போவதற்கான சாக்கடை வசதியோ இல்லை. இதனால், மழைக்காலங்களில் மலேரியா போன்ற கடுமையான தொற்று நோய்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. சாக்கடை கட்டப்படாததால் மழைக்காலங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதைகளில் தேங்கும். ஏதுமறியாத சிறு குழந்தைகள் அந்தநீரில் விளையாடுவதால் தொற்றுநோய் பீடிக்க காரணமாகிறது. ஆகவே, தொகுதி எம்.பி.யும். எம்.எல்.ஏ.வும் துர்கா காலனி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.காலனி முதல் தெருவைச் சேர்ந்த கன்னிகா கூறுகையில், "கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. இதனால், பகல் நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு கழிப்பறைப் பக்கம் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. இரவில்தான் செல்ல வேண்டியுள்ளது. போதிய விளக்கு வசதியும் இல்லை என்றார்.

கனகதுர்கா காலனி கோவில் முன்னாள் தலைவர் கே. முத்துசாமி கூறியதாவது:

காலனியில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகத்தான் உள்ளன. குளிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் போதிய கழிப்பறைகளும், குளியறைகளும் இல்லை. ஏற்கெனவே இருந்த கழிப்பறைக் கட்டடம் சரி செய்யப்படாமல் கிடக்கிறது. மேலும், அப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இக்காலனி மட்டுமின்றி சிவா கேம்ப், கூலி கேம்ப், சாஸ்திரி மார்க்கெட், நேரு ஏக்தா காலனி உள்ளிட்ட இடங்களிலும் இதே அவல நிலைதான் நிலவுகிறது.இங்குள்ள அடிப்படைப் பிரச்னைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக் கொடுத்தால் நடவடிக்கையில் மெத்தனம் காட்டுகின்றனர். தமிழர்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாகத்தான் பார்க்கின்றனர். மாநில முதல்வர் ஷீலா தீட்சித் இந்த விஷயத்தில் மனிதாபிமான முறையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.