/

வைஸ்ராய்க்கு பட்டாசு மாலை சுதந்திரப் போராட்ட தியாகியின் நினைவலை...

பாரதம் அன்னியரின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 65 ஆண்டுகளைக் கடந்தாகிவிட்டது. ஆனாலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்புடன்தான் சுதந்திர தின ந

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:49 am

வே.சுந்தரேஸ்வரன்

பாரதம் அன்னியரின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 65 ஆண்டுகளைக் கடந்தாகிவிட்டது. ஆனாலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்புடன்தான் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டியுள்ளது.

எனினும், ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பார்க்கும்போது மனம் கசிந்துருகி விடுகிறது. அவர்களது தியாகம் அப்படிப்பட்டது!

இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த தியாகிகள் ஆர். முருகமலை, பி. கைலாசம், வி. கணேசன், காளையார் ஆகியோர் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாலைப் பொழுதொன்றில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நால்வரும் தங்களது சுதந்திரப் போராட்டக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தியாகி ஆர். முருகமலை (87):

எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பண்ணைக்காடு மலைக்கிராமம். எனது தந்தை நீதிக் கட்சியைச் சேர்ந்தவர். தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இயக்கம் அது.

எனினும், எனது சித்தப்பாக்கள் டி.கே. பாலசுப்பிரமணி, டி.கே. காமாட்சி ஆகிய இருவரும் காந்திஜியின் சத்தியாகிரகப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

1941-ம் ஆண்டு. எனக்கு அப்போது 12 வயது இருக்கும். அவர்களுடன் சேர்ந்து நானும் கொடி பிடித்துச் சென்றேன்.

போராட்டத்திற்காக பிரிட்டிஷ் போலீஸôரால் கைது செய்யப்பட்ட சித்தப்பாக்கள் இருவரும் பெல்லாரி மாவட்டம், அலிப்புரம் கேம்ப் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் நானும் சிறையில் இருந்தேன்.

  இதனிடையே, மும்பையில் 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ல் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பூரண சுயராஜ்யம் பெறுவதற்கான, "செய் அல்லது செத்து மடி' என்ற கோஷம் முழங்கப்பட்டது. 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த தீர்மானத்தின் நகல் வைஸ்ராய் லார்டு வேவல் மூலம் ஆங்கிலேய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் இயக்கத்திற்கு ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. பல தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நான் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டோம். காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ் எங்களுக்கு இந்த இயக்கப் பிரசாரத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகளை வழங்கினார். எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த "கிரிஸ்டல் ரேடியோ' மூலம் சுதந்திரப் போராட்டத் தகவல்களைப் பெற்று மக்களுக்கு அளித்து வந்தோம்.

இதற்காக தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றோம். பிச்சைக்காரர்களிடம் மகாகவி பாரதியார், சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர், ஸ்ரீ பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியோரது பாடல்களைப் பாட பயிற்சி கொடுத்து ரயில்களில் சென்று பாடுமாறு செய்தோம்.

மதுரையிலும் மறைமுகமாக சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, 1942-ம் ஆண்டில் மதுரையில் "போர்க் கண்காட்சி'யைத் திறப்பதற்காக  வைஸ்ராய் லார்டு வேவல் வந்தார். அவரை பட்டாசு மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வரவேற்பு மாலையில் மறைத்து வைத்துக் கொலை செய்ய முயற்சி நடத்தப்பட்டது. அதில் அவர் தப்பிவிட்டார். கோவிந்த் நாயர் என்ற போலீஸ் அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டது.

வெடி மருந்துக்கான ரசாயனப் பொருள்களை 40 மாணவர்கள் சப்ளை செய்த போதிலும், போலீஸôரால் அடையாளம் காண முடியவில்லை. அதெல்லாம் இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பிறகும் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதை ஊழல் ஒழிப்பு சார்ந்த இயக்கம் மூலம் சாதித்துவிட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஊழல் எதிர்ப்பு என்பது தனிப்பட்ட மனிதரின் மனத்தில் இருந்து  தொடங்க வேண்டும். கிராம சுயராஜ்யம் இதற்கு வலு சேர்க்கும் என்றார்.

 தியாகி பி. கைலாசம் (79):

எனது மூதாதையர் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டாலும் நான் பிறந்தது பர்மா ரங்கூனில் உள்ள கூம்பை கிராமத்தில்தான். அங்குள்ள செட்டியார் பள்ளியில் படித்தேன். அப்போது எனக்கு 13 வயது இருக்கும்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1943-ம் ஆண்டு பர்மாவில் முதல் கூட்டம் நடத்தினார். அவருடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால், ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தின் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்திய தேசிய ராணுவத்தின் போருக்கான நிதி திரட்டுதல், பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்றதால் பர்மாவில் பிரச்னை ஏற்பட்டது. இந்திய தேசிய ராணுவம் வலுவிழந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கிருந்து 1964-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக வந்தோம்.

நேதாஜி தலைமையில் சேவையாற்றிய அனுபவத்தை இப்போது நினைத்தாலும் ஆனந்தமாக  இருக்கும். தற்போது பெருகிவரும் ஊழல் சுதந்திரத்தின் மகிமையைக் குலைப்பதாக உள்ளது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமானால் சட்டத்தால் மாற்றம் கொண்டு வரப்படுவது அவசியம்.

தியாகி ஏ. காளையார் (85):

  பர்மாவில் தெங்கூஞ்சூரில் எங்களது குடும்பம் இருந்தது. 16 வயது இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்திற்காகப் பிரசாரம், நிதி வசூல், ஆள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன். ஏழு மாதம் சிறையில் இருந்தேன். சுபாஷ் சந்திர போஸின் தலைமையின் கீழ் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட நிகழ்வு மிகவும் மறக்க முடியாத அனுபவமாகும்.

தியாகி வி. கணேசன் (87):

சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது சிங்கப்பூரில் எங்களது குடும்பம் இருந்தது.

எனக்கு 18 வயது இருக்கும். ரங்கூனில் நேதாஜியின் உரையைக் கேட்டேன். அதன்பால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினேன். கடுவேலி முகாமில் இருந்தேன். பர்மாவில் ஒரு ஆண்டு இந்தப் பணியை மேற்கொண்டேன்.

எங்கள் படைக்கு ஆயுத சப்ளை இல்லாமல் போனதால் பின்வாங்க நேரிட்டது. பிறகு ரங்கூன் அரசால் ஓராண்டு போர்க் கைதியாக வைக்கப்பட்டேன். நாடு சுந்திரம் அடைந்த பிறகு ரங்கூனில் இருந்து இந்தியாவுக்கு வந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.