தில்லி நிர்வாக அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் துணைநிலை ஆளுநர் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தில்லி அரசு பணியாளர்கள் நியமன விவகாரத்தில் உள்ள சந்தேகம் குறித்து துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உச்ச நீதிமன்றத்தை அணுகி தெளிவுபடுத்தி கொள்ளலாம் என்றும் துணைநிலை ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே தில்லி நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என்றும் தில்லி அமைச்சரவையின் ஆலோசனையின்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
எனினும், தில்லி அரசு அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் தில்லி அரசிடம் அளிக்க மறுத்துவிட்டார் என்று கேஜரிவால் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் கேஜரிவால் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுவதுமாக அமல்படுத்த வேண்டியது தில்லி துணைநிலை ஆளுநரின் கடமையாகும். இந்தத் தீர்ப்பின் அம்சங்களை வைத்து விளக்கமளிக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடையாது. தீர்ப்பில் உங்களுக்கு ஏதாவது குழப்பங்கள் இருந்தால், உச்ச நீதிமன்றத்தை அணுகி தெளிபடுத்தி கொள்ள வேண்டும். தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு அம்சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்ற வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எப்படி கூற
முடியும்?
ஒன்று தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மற்ற அம்சங்கள் குறித்த விசாரணை நடைபெறும் அமர்வு முன் அனைத்து விவகாரங்களும் முன் வைக்கப்படும் என்ற நிலைப்பாட்டை துணைநிலை ஆளுநர் எடுக்க வேண்டும். தயவு செய்து கடந்த 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீற வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.