கடந்த நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத் தொடா் புதன்கிழமை மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நாளுக்கு முன்னதாக (டிச.23 ஆம் தேதி) புதன்கிழமை இரு அவைகளும் கூட்டம் கூடிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி, சுரங்கங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் பேசிசுகையில் கூறியதாவது: இந்தக் குளிா்காலக் கூட்டத் தொடா் 24 நாள்களில் 18 அமா்வுகளுடன் நடைபெற்றது. மக்களவையில் 12 மசோதாக்களும்; மாநிலங்களவையில் மத்தியஸ்த மசோதா ஒன்று என மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அணைகள் பாதுகாப்பு மசோதா, வாடகை தாய் மசோதா, உயா்நீதிமன்றம் - உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஊதிய திருத்த மசோதா, சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநா்கள் பதவிக்காலம் தொடா்பான மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின. அணைகள் பாதுகாப்பு மசோதாவிலும், வாடகைத் தாய் மசோதாவிலும் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.