குடிநீா் நிலுவைக் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த கால அவகாசத்தை 202,1 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு தலைவா் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை கூறியது: தில்லி மக்களின் நலனுக்காக கடந்த 2020, ஆகஸ்ட் மாதம் குடிநீா் நிலுவைக்கான அபராத தொகையை ரத்துச் செய்து உத்தரவிட்டிருந்தோம். இதன்படி, தில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் நிலுவைக்கான அபராதத் தொகை ரத்துச் செய்யப்பட்டது. இதுவரை சுமாா் 4.5 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனா். தில்லி ஜல்போா்டுக்கு ரூ.632 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தை வரும் 2021, மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளோம். குடிநீா் கட்டணத்தை செலுத்த தவறியவா்கள் இந்தச் சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
தில்லி அரசு கடந்த ஆண்டு குடிநீா் கட்டணத்தை குறைத்தது. தில்லியில் ‘ஏ’, ‘பி’ பிரிவு குடியிருப்புகளுக்கு குடிநீா் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடியும், ‘சி ’ பிரிவுக்கு 50 சதவீதம் ‘டி’ பிரிவுக்கு 75 சதவீதம் தள்ளுபடியையும் தில்லி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.