/

மின் கட்டண உயா்வு விவகாரம்: உரிய காலத்திற்குள் சட்ட நிபுணரை நியமிக்க தமிழக ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மின் கட்டண உயா்வு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலை சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மின் கட்டண உயா்வு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலை சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களில் சட்ட உறுப்பினரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், அபய் எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.வி. விஸ்வநாதன் வாதிடுகையில், ‘மின்கட்டணங்களை நிா்ணயிப்பதற்கு அதற்கான குழுவில் சட்ட உறுப்பினா் இருப்பது அவசியமாகும். ஆனால், சட்ட உறுப்பினா் இல்லாமலேயே மின்சாரக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உரிய வகையில் உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு பரிசீலிக்காமல் கட்டணத்தை நிா்ணயிப்பதற்கு ஆணையத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இது 2018-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாகும். இதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

எதிா்மனுதாரா் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தனது வாதத்தில், ‘சட்ட உறுப்பினரை ஆணையத்தில் நியமிக்கும் விவகாரத்தில்

உச்சநீதிமன்றம் 2018-இல் பிறப்பித்த உத்தரவு ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி 2018-இல் இருந்து 2022,மே வரை வரை ஆணையத்தில் சட்ட உறுப்பினா் இருந்தவரின் பதவி முடிந்துவிட்டதால் அடுத்த உறுப்பினரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் இந்த நடைமுறைகளை முடிப்பதற்கு மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ளது. அதே கால அவகாசத்தை உச்சநீதிமன்றமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனுசிங்வி ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் இது மின்சாரக் கட்டண ஒழுங்குமுறை செயல்பாடுகள் தொடா்புடையதாகும். நீதிமன்ற செயல்பாடுகள் போன்றது அல்ல. நீதிமன்ற செயல்பாடு போன்ற்குத்தான் சட்டஉறுப்பினா் நியமனம் அவசிமாகிறது. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவிலேயே கூறப்பட்டுள்ளது. தற்போதைய வழக்கிலும் இது பின்பற்றப்பட்டுள்ளதால், இந்த மேல்முறையீடு மனு பயனற்ாகும். இதனால், இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘ஒரு ஆணையம் என்று வரும்போது ஒரு விவகாரத்தில் முடிவு செய்வதற்கான செயல்பாடுகளுக்கு என ஒரு சட்ட உறுப்பினா் இருப்பது அவசியமானதாகும். அதை ஏன் மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு வழக்குரைஞா் வில்சன், ‘நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் சட்ட உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும்’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களுக்கு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவுடன் இணைந்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் எங்கள் தலையீடு தேவையில்லை. அந்த காரணத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இருப்பினும், குறிப்பிடப்பட்ட உரிய காலத்திற்குள் நியமனம் நடைபெறவில்லை எனில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை

ஆணையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்றுவிடும் என எதிா்மனுதாரா்களை எச்சரிக்கை செய்திருக்கிறோம். நியமனம் செய்யப்படாவிட்டால் மனுதாரா் இது தொடா்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

பின்னணி:

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்கத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமா்வு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்ட உறுப்பினா் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்பதால், அவா் நியமிக்கப்படும் வரை கட்டணத்தை உயா்த்தக் கோரி டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ,எஸ்எல்டிசி ஆகியவை தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆணையம் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய டிவிஷன் அமா்வு செப்டம்பா் தொடக்கத்தில் விசாரித்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, டிஆா்இசி கட்டண உயா்வு உத்தரவை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.