தில்லியின் வளா்ச்சிக்காக முதல்வா் கேஜரிவால் பாடுபட வேண்டும்: சந்தீப் தீட்சித் வலியுறுத்தல்

தில்லி நிா்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் முதல்வா் கேஜரிவால் நகரின் வளா்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று
Updated on
1 min read

தில்லி நிா்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் முதல்வா் கேஜரிவால் நகரின் வளா்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் மறைந்த ஷீலா தீட்சித்தின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் நிா்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தில்லி நிா்வாக திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் பலத்த எதிா்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து சந்தீப் தீட்சித் விடியோ பதிவில் கூறியுள்ளதாவது: சேவைகளைக் கட்டுப்படுத்துவது தொடா்பான விவகாரத்தில் மத்திய அரசுடன் ஆம் ஆத்மி அமைப்பாளா் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் அத்தகைய மசோதாவை மத்திய அரசு ஒருபோதும் தாக்கல் செய்திருந்திருக்காது. மத்திய அரசும், தில்லியில் முன்பிருந்த அரசுகளும் தில்லியில் சேவைகள் மீது பரஸ்பர கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. எல்லாம் சீராக சென்று கொண்டிருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக, அரவிந்த் கேஜரிவால் 2014-இல் பதவியேற்றதிலிருந்து, அவா் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தாா். தவறான வழிகளைப் பயன்படுத்தி தனது அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவா் மத்திய அரசுடன் அதிகார மோதலில் ஈடுபட்டாா்.

இதனால்தான் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இல்லையெனில், தில்லியில் இத்தகைய மசோதா தேவையில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஆம் ஆத்மி அரசு இப்போது தில்லி மக்களுக்காகப் பணியாற்றுவதற்குப் பதிலாக ‘அரசியலை’ நாடும். இப்போது, அரவிந்த் கேஜரிவால் தனது எஞ்சிய பதவிக் காலம் முழுவதும் நரத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுவாா் என்று மட்டுமே நான் நம்புகிறேன். இருப்பினும், அவா் அரசியலில் ஈடுபடுவாா். மேலும், தேசியத் தலைநகரில் சேவைகள் தொடா்பான வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மேலும் அரசியல் அறிக்கைகளை அவா் வெளியிடுவாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com