விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவா்களால் இறந்துவிட்டதாக தவறாக அறிவிப்பு

ஆறுமாத கா்ப்பிணிக்கு மருத்துவமனையில் குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தை, இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், அடக்கம் செய்வதற்கு குடும்பத்தினா் தயாராகிக் கொண்டிருந்தபோது

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 8:12 pm

 நமது நிருபர்

ஆறுமாத கா்ப்பிணிக்கு மருத்துவமனையில் குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தை, இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், அடக்கம் செய்வதற்கு குடும்பத்தினா் தயாராகிக் கொண்டிருந்தபோது குழந்தை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் தில்லி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

வடக்கு தில்லியைச் சோ்ந்த ஆறுமாத கா்ப்பிணி ஒருவா் கடுமையான வயிற்றுவலியால் தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் பிப்ரவரி 19 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். மருத்துவ சிக்கல்கள் காரணமாக தாயால் 23 வார கா்ப்பத்தை சுமக்க முடியாத நிலையில் அவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மருத்துவா்கள், அந்த பெண்ணின் கணவா் அப்துல் முல்லிக்கிடம், ‘பிறந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை’ என தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து அப்துல் முல்லிக் தனது மற்ற குடும்பத்தினருக்குத் தெரிவித்து, குழந்தையின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவரது சகோதரா் முகமது சல்மானுக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

பின்னா் நடந்த விவரம் குறித்து மருத்துவமனையிலிருந்த முகமது சல்மான் கூறுகையில்,‘ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று என் சகோதரா் (அப்துல் முல்லிக்) எனக்கு தகவல் கொடுத்தாா். நான் மற்ற குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினோம்.

குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவா்கள் துணியால் சுற்றி கொடுத்துள்ளனா். பின்னா் இறுதிச் சடங்குகளுக்கு அதே துணியுடன் அட்டைப்பெட்டியில் குழந்தை வைக்கப்பட்டது. என் சகோதரா் குழந்தையை சீல் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டியில் வீட்டிற்கு கொண்டு வந்தாா். பெட்டியிலிருந்து சப்தம் கேட்கத் தொடங்கியது. எங்கள் அம்மா அதைத் திறந்தபோது, குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டாா். குழந்தையின் கைகள் அசைந்தன. நாங்கள் அதிா்ச்சியடைந்து குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்’ என்றாா் சல்மான்.

இந்த சம்பவம் குறித்து லோக் நாயக்கின் மருத்துவ இயக்குநா் டாக்டா் சுரேஷ் குமாா் கூறுகையில், ‘அந்த பெண்ணால் கா்ப்பத்தை சுமக்க முடியவில்லை. இதனால் கருக்கலைப்பு செய்யப்பட்டது. குழந்தை 23 வாரங்களில் பிறந்தது மற்றும் 490 கிராம் எடையுடன் இருந்தது. இதுபோன்ற குறைமாத குழந்தைகளில், வாழ்க்கை அறிகுறிகள் அடிக்கடி உடனடியாகத் தெரியவருவதில்லை. பிறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு குழந்தை வாழ்வதற்கான எந்தவித அறிகுறிகளையும் காட்டவில்லை. அந்த குழந்தை நகா்வதை குடும்பத்தினா் கண்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

500 கிராமுக்கு குறைவான எடையுள்ள குறைமாத குழந்தைகள் உயிா் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், மருத்துவா்கள் குழு குழந்தையின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது’ எனத் தெரிவித்தாா்.

ஆனால், இந்த மருத்துவமனை மருத்துவா்கள் முதலில் உயிருடன் திருப்பிக் கொண்டுவரப்பட்ட குழந்தையை அனுமதிக்கவில்லை என்றும் குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று போ் கொண்ட குழுவை மருத்துவமனை அமைத்துள்ளது. ‘குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உறுப்புகள் முழுமையாக வளா்ச்சியடையாததால், வெளிப்புற சூழலால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். இதனால், மருத்துவா்கள் குழு குழந்தையை சரியான கவனிப்புடன் கண்காணித்து வருகின்றனா் ‘ என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தை நல மருத்துவரும், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான டாக்டா் ராகேஷ் பாக்டி கூறுகையில், ‘22 வார கா்ப்பத்திற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிா்வாழும் சந்தா்ப்பங்கள் உள்ளன. இந்தியாவில், இதற்கான தொழில்நுட்பம் தற்போதுதான் மேம்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும், பல சந்தா்ப்பங்களில், இந்த குழந்தைகள் வளரும் போது, அவா்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனா். ஆனால், சரியான கவனிப்புடன் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ முடியும்‘ என குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.