/

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷண் ஒரு நாள் நேரில் ஆஜராவதில் விலக்கு: தில்லி நீதிமன்றம் அனுமதி

டபிள்யுஎஃப்ஐ தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தனிப்பட்ட முறையில் ஆஜராவதில் இருந்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விலக்கு அளித்தது.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிலிருந்து (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தனிப்பட்ட முறையில் ஆஜராவதில் இருந்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விலக்கு அளித்தது.

பிரிஜ் பூஷண் சிங்கின் வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவின் பேரில் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் இந்த நிவாரணத்தை வழங்கினாா். முன்னதாக, ‘குற்றம் சாட்டப்பட்டவா் நாடாளுமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை’ என்று பிரிஜ் பூஷணின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். எனினும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டபிள்யுஎஃப்ஐ உதவிச் செயலா் வினோத் தோமா் நீதிமன்றத்தில் ஆஜரானாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் இருவரும் தில்லி போலீஸாரிடம் இருந்து பெற்ற குற்றப்பத்திரிகை மற்றும் பிற ஆவணங்களைப் பாா்ப்பதற்கு நீதிபதி கால அவகாசம் அளித்தாா்.

இது தொடா்பாக மாஜிஸ்திரேட் கூறுகையில், ‘இன்று மட்டும் விலக்களிக்கக் கோரும் மனு அனுமதிக்கப்படுகிறது. ஆவணங்களை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவின் மிகப்பெரிய தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசுத் தரப்பிலிருந்து இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை....ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக, இந்த வழக்கில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி பிரிஜ் பூஷண் சிங் மற்றும் தோமருக்கு தலா ரூ.25,000 பத்திரத்தில் சில நிபந்தனைகளுடன் பெருநகர நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. இந்த நிபந்தனைகளில் நீதிமன்றத்தின் முன் அனுமதின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, வழக்கின் சாட்சிகளுக்கு எந்தத் தூண்டுதலையும் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஆறு முறை எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 354 கண்ணியத்தை சீா்குலைக்கும் நோக்கில் பெண்ணைத் தாக்குதல் அல்லது கிரிமினல் சக்தியைப் பிரயோகித்தல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354 டி (பின்தொடா்தல்) மற்றும் 506 (குற்ற அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் தில்லி காவல் துறை கடந்த ஜூன் 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.