/

தில்லியில் டெங்கு பரவலைத் தடுக்க முதல்வா் கேஜரிவால் ஆலோசனை

தில்லியில் அதிகரித்து வரும் டெங்கு உள்ளிட்ட பிற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் அதிகரித்து வரும் டெங்கு உள்ளிட்ட பிற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோரும் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கிய கூட்ட,ம் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின் படி, நிகழாண்டில் ஜூலை 22-ஆம் தேதி வரை தில்லியில் மொத்தம் 187 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அதிகபட்சமான எண்ணிக்கையாகும். தில்லி சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சியின் மூத்த அதிகாரிகளுக்கு தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நகரத்தில் நிகழாண்டு ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 65-ஆக இருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதத்தில் 40-ஆகவும், மே மாதத்தில் 23-ஆகவும் இருந்துள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் 61 பேருக்கு மலேரியா பாதிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை 159 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. 2021- ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 47 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதுவே, கடந்த 2018, 2019 மற்றும் 2020 -ஆம் ஆண்டுகளில் முறையே 49, 34 மற்றும் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது என்றாா் அந்த மூத்த அதிகாரி.

யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஜூலை இரண்டாம் வாரத்தில் நகரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. தில்லி முழுவதும் 27,000 மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் வெள்ளம் காரணமாக டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது என்று தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் சமீபத்தில் மக்களை எச்சரித்திருந்தாா். மேலும்,

கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், வெள்ளத்தால் தேங்கியுள்ள பகுதிகளில் வண்டல் மற்றும் சேறுகளை அகற்றவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அவா் உத்தரவிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.