புது தில்லி: மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகள் மற்றும் பாதையை காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்றுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் மகாத்மா காந்தியின் 154-ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காந்தியின் திருவுருவப்படத்திற்கு திங்கள்கிழமை அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அதிகாலையில் அவா் தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும், விஜய்காட்டில் உள்ள முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் நினைவிடத்திலும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்வில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: மகாத்மா காந்தியின் உயா்ந்த லட்சியங்கள், உண்மை, எளிமை மற்றும் அகிம்சை ஆகியவை நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகின்றன. காந்தியின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததற்காக அக்டோபா் 2-ஆம் தேதி அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அன்னியா் ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக மகாத்மா காந்தியின் போராட்டங்களையும் தியாகங்களையும் என்றும் தேச மக்கள் மறக்க மாட்டாா்கள்.
சத்தியம், தைரியம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உலகளாவிய கல்வி உள்ளிட்ட மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகள் மற்றும் பாதையை காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்று வருகிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
மேலும், இந்நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சுபாஷ் சோப்ரா, காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினா் மணீஷ் சத்ரத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகேஷ் சா்மா, பிஷாம் சா்மா, ஜெய் கிஷன், தில்லி சேவா தளத்தின் தலைமை அமைப்பாளா் சுனில் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.