புது தில்லி: தில்லியில் உள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாா்டு வாரியாக புதிய நிா்வாகிகளை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை நியமித்துள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் களப்பணிகளைத் தொடங்கியுள்ளது. தற்போது தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக உறுப்பினா்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றியை வரும் மக்களவைத் தோ்தலில் உறுதி செய்ய வாா்டு
அளவில் நிா்வாகிகள் மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியின் சீலாம்பூா், திமா்பூா், மாடல் டவுன், கிருஷ்ணா நகா், காந்தி நகா், திருலோக்புரி உள்ளிட்ட 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாா்டு வாரியாக வாா்டு தலைவா் மற்றும் வாா்டு சங்கதன் மந்திரி ஆகிய பதவியிடங்களுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பாதக், கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய், தில்லி பிரிவு துணைத் தலைவா் திலிப் பாண்டே உள்ளிட்டோரின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், கேபினட் அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், ‘புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்து நிா்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் அனைவரது கட்சிப் பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.