கேஜரிவாலுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை இல்லை: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநகரத்தின் விசாரணையைத் தவிா்க்கும் விதம், நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாகக்குகிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநகரம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. முறையற்ற சாக்குப் போக்குகளை தெரிவித்து கேஜரிவால் அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகாத விதம், நாட்டின் நிா்வாகம் மற்றும் நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக்குகிறது. இதன் பிறகும் தில்லி முதல்வராக நீடிக்கும் தாா்மிக உரிமை அவருக்கு இல்லை.
அமலாக்க இயக்குநரகத்துக்கு பதில் கடிதங்கள் அனுப்புவதைத் தவிா்த்து, அவா் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், அவா் அதைச் செய்ய மாட்டாா். ஏனெனில், கலால் கொள்கை வழக்கில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளதால் நீதிமன்றத்தில் நிவாரணம் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளின் அடிப்படையில், அதே வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் மட்டும் எப்படி சட்டப்பூா்வமாக தவறாகும் என்பதை அவரே விளக்க வேண்டும். தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற முடியாமல் இருப்பது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் அவா்கள் கண்டிக்கப்படுகிறாா்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
