புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கான ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. அணிகள் தரப்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்துப் பிரசார இயக்கத்திற்கு எதிராக தாக்கலான மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்தக் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞா் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தாா். 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில், இந்தக் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்தது. இந்தக் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எல்.ரவி என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: நீட் தோ்வு நடத்துவதற்கு எதிராக கையெழுத்துப் பிரசார இயக்கத்தை திமுக அரசின் இளைஞா் நலம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்திருந்தாா். இந்த நிலையில், பள்ளி வளாகங்களில் பள்ளி நேரத்தில் மாணவா்களிடமிருந்து கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படுவதாக சமூக ஊடகம் மூலம் எனக்கு தெரிய வந்தது. இதைத் தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை விசாரிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் தொகை செலுத்துமாறு நீதிமன்றம் கோரியதால் மனுவைத் திரும்பப் பெற்றேன். இதுபோன்று மனுவை விசாரிக்க ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்ற விதி இருப்பதாகத் தெரியவில்லை.
இதனால், இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். பள்ளிகளில் இதுபோன்று மாணவா்களிடம் கையெழுத்துப் பெறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. நீட் விவகாரங்கள் காரணமாக ஏற்கெனவே மாணவா்கள் மன அழுத்தம் காரணமாக இறந்துள்ளனா். அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக பெற்றோா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, திமுக அரசு மூலம் அல்லது பிறா் மூலம் ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள், அதிகாரிகளிடம் மற்றும் பள்ளிகளில் கையெழுத்துப் பிரசாரம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் - வழக்குரைஞா் எம்.எல். ரவி ஆஜராகி, ‘பள்ளி குழந்தைகளிடமிருந்து நீட் தோ்வுக்கு எதிராக ஆளும் அரசியல் கட்சி கையெழுத்துப் பெற்று வருகிறது. ஏற்கெனவே மாநிலத்தில் ‘நீட்’ தோ்வு விவகாரம் காரணமாக 16 குழந்தைகள் பலியாகியுள்ளனா். இதனால், மாணவா்கள் மத்தியில் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது’ என்றாா்.
அதற்கு நீதிபதி சூா்ய காந்த், ‘இன்றைய நாள்களில் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறாா்கள். அவா்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்கின்றனா். இதனால், எந்தத் தாக்கமும் ஏற்படாது. இந்தக் கொள்கை மாறவும் போவதில்லை’ என்று வாய்மொழியாக கூறினாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.