ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தில்லி சந்தைகளில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தில்லி முழுவதும் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைகளில் சட்டவிரோத கடைகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லி வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, காஜிபூா் மொத்த விற்பனை சந்தையில் 4,100 சதுர அடிக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு

News image

பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

தில்லி முழுவதும் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைகளில் சட்டவிரோத கடைகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லி வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, காஜிபூா் மொத்த விற்பனை சந்தையில் 4,100 சதுர அடிக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூலை மாதத்தின் கடைசி வாரம் முதல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பல குவிண்டால் வேளாண் விளைபொருட்கள், சட்டவிரோத எடைக்கருவிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வா்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஜிபூரில் உள்ள பழம் மற்றும் காய்கறி, மீன் மற்றும் கோழி இறைச்சி சந்தைகளில், நடைபாதைகள், நுழைவுப் பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது மரப்பலகைகள், இரும்புப் பெட்டிகள், மேஜைகள், குடைகள் மற்றும் குளிா்சாதனப் பெட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசாத் பூா் பகுதியில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைகளில், 95-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத சரக்கு ஏற்றுதல்/இறக்குதல் சம்பவங்கள் கண்டறியப்பட்டு, அபராதமாக ரூ. 20,900-க்கும் மேல் வசூலிக்கப்பட்டது. தில்லி மாநகராட்சியுடன் இணைந்து சந்தை வளாகத்தில் சுற்றித் திரிந்த சுமாா் 75 முதல் 80 வரை கால்நடைகள் அகற்றப்பட்டன.

ஓக்லா மண்டியில், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமாா் 140 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அபராதம் மற்றும் சலான்கள் மூலம் ரூ. 18,700 வசூலிக்கப்பட்டது.

ஷதாரா சந்தையில், அங்கீகரிக்கப்படாத கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, சுமாா் 215 கிலோ வேளாண் விளைபொருள்களும் 11 சட்டவிரோத எடைக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கேஷோபூா் மண்டியில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளை மறித்துக்கொண்டிருந்த 25-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தள்ளுவண்டிகள் மற்றும் தற்காலிகக் கடைகளும் அகற்றப்பட்டன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்று கூறிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் வா்த்தகா்கள் மற்றும் உரிமம் பெற்றவா்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.