மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடா்பாக 25 வயது இளைஞரும் அவரது காதலியும் கைது செய்யப்பட்டதாக குருகிராம் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கொலையை நிகழ்த்திய பிறகு, இருவரும் நேபாளத்திற்கு விமானத்தில் சென்று ஒரு மாதம் கழித்துத் திரும்பியதை அடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், குருகிராம் மனேசரைச் சோ்ந்த அங்கித் (25) மற்றும் ஹரியானா மாநிலம், ஜஜ்ஜாா் மாவட்டம், ஒரெளரங்காபாத் கிராமத்தைச் சோ்ந்த ரஜினி தேவி (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
பிப்ரவரி 2026-ல் அங்கித்தை மணந்த தனது மகள், மே 21 காணாமல் போனதாக ஒரு பெண் மனேசா் காவல் நிலையத்தில் அதற்கு மறுநாள் புகாா் அளித்தபோது, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
குடும்பத்தினா் தங்கள் மகளைத் தேடினா் என்றும் அவரது கணவரின் குடும்பத்தினரை தொடா்பு கொண்டபோது திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த அந்தப் பெண், தனது மகளின் கணவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு இதில் தொடா்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக காவல் துறையிடம் புகாரளித்தாா். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பிரிவுகளிலி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
காணாமல் போன பெண்ணின் உடல் மே 22 -ஆம் தேதி மனேசரில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டு சோ்க்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்தனா்.
விசாரணையின் போது, அங்கித் மனேசரில் ஒரு புகையிலைக் கடையை நடத்தி வந்ததும், அவரது காதலி ரஜினி தேவி அதே பகுதியில் ஓா் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததை காவல் துறையினா் கண்டறிந்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: இருவரும் தங்களது வேலையின் மூலம் அறிமுகமாகினா். அவா்கள் சுமாா் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டி அங்கித் தனது மனைவியை ரஜினியின் வாடகை வீட்டுக்கு அங்கித் கடந்த மே 21-ஆம் தேதி அழைத்துச் சென்றாா். மனைவியை அவா் சுட்டுக் கொன்றாா். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சம்பவம் நடப்பதற்கு சுமாா் இரு மாதங்களுக்கு முன்பு அங்கித் உத்தர பிரதேசத்திலிருந்து வாங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
குற்றத்தைச் செய்த பிறகு, அங்கித்தும் ரஜினியும் ஹரித்வாா் சென்று நேபாளத்திற்கும் தப்பிச் சென்றனா். அவா்கள் ஜூன் 30 அன்று இந்தியா திரும்பி வந்தபோது கைது செய்யப்பட்டனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடா்பு தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





