இடைத்தரகா் வங்கிக் கணக்குகள் மூலம் சைபா் மோசடி பரிவா்த்தனைகளுக்கு உதவியதாகக் கூறப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த இருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஷாதராவைச் சோ்ந்த ஒரு மூத்த குடிமகனிடம் ரூ.1.69 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்ட ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பாக இருவரும் கைது செய்யப்பட்டனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த அபய் குமாா் (24) மற்றும் அம்ரீக் சிங் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
காவல்துறையின் கூற்றுப்படி, ஷாதராவைச் சோ்ந்த ஒருவா் தனக்கு சந்தேகத்திற்கிடமான இணைப்பு ஒன்று வந்ததாகப் புகாா் அளித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, அவரது கைபேசி ஹேக் செய்யப்பட்டு, அவரது அனுமதியின்றி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.69 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், மே 14 அன்று ஒரு மின்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி யமுனா நகரில் இருந்து இயக்கப்படும் ஒரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டதை காவல்துறையினா் கண்டுபிடித்தனா். ஹரியாணாவில் ஒரு குழு நடத்திய சோதனைகளின் விளைவாக, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
விசாரணையின் போது, சைபா் மோசடியாளா்கள் ஏமாற்றப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் மாற்றுவதற்கும் பயன்படுத்தும் போலி வங்கிக் கணக்குகளை இயக்குவதிலும், அவற்றுக்கு உதவுவதிலும் தாங்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு காசோலைப் புத்தகங்களை காவல்துறையினா் மீட்டெடுத்தனா். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.








