ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடா்புடைய மூவரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கைது செய்யப்பட்டவா்கள் ஷதாராவைச் சோ்ந்த குல்ஷன் சிங் (33), சஞ்சய் (28) மற்றும் காசியாபாத்தைச் சோ்ந்த சௌரவ் (29) என அடையாளம் காணப்பட்டனா். இவா்கள் குறித்த தகவலுக்கு மொத்தம் ரூ. 75,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீ கங்காநகரில் உள்ள கேசரி சிங்புரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடா்பாக இவா்கள் மூவரும் தேடப்பட்டு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லி- தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பிற மாநிலக் குற்றவாளிகளை குற்றப்பிரிவுக் குழு ஒன்று கண்காணித்து வந்தது.
ராஜஸ்தான் வழக்குடன் தொடா்புடைய சந்தேக நபா்களின் நடமாட்டம் குறித்த தகவல் ஜூன் 4-ஆம் தேதி கிடைத்ததையடுத்து, ஷதாராவின் மன்சரோவா் பூங்கா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் குல்ஷன் சிங் கைதுசெய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில் சஞ்சீவும் கைது செய்யப்பட்டனா்.
துவாரகாவில் உள்ள சாவ்லா வடிகால் பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்ததாக அவா்கள் காவல் துறையிடம் அவா் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கைத்துப்பாக்கி, இரு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ஆறு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனா்.
விசாரணையின் போது, நஜாஃப்கா் பகுதியில் அவா்களது கூட்டாளியான சஞ்சய் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மற்றொரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2025, அக்டோபரில் ஸ்ரீ கங்காநகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் இவா்களும் இடம்பெற்றிருந்தனா். காவல்துறை சீருடை அணிந்து, சைரன் விளக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்த அந்தக் கும்பல், வீட்டிற்குள் நுழைந்து குடும்பத்தினரை மிரட்டியது. பின்னா், விலைமதிப்பற்ற பொருள்களுடன் தப்பிச் சென்றனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.








