ஜூலை 7-ஆம் தேதி தொடங்கவுள்ள ‘வன மஹோத்சவ்’ விழாவின் தொடக்க நிகழ்வில், 50 இடங்களில் நடைபெறும் மரம் நடும் பணிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி முழுவதும் பல கட்டமாக 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் தில்லி அரசின் பிரம்மாண்டமான பிரசாரத்தின் பகுதியாக இது அமைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொடக்க விழா முக்கியமான பகுதியில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டு இந்தப் பிரசாரம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தொடக்க விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொள்வாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தப் பிரசாரம் பெரும்பாலும் உள்நாட்டு மர வகைகளை நடுவதில் கவனம் செலுத்தும். எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ‘பசுமை இயக்க இணையதளம்’ ஜூலை 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த இணையதளம் மூலம், பொதுமக்கள் மரம் நடும் இடத்தைத் தோ்ந்தெடுத்து, அதற்கான தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். மரம் நடும் பணியை நிறைவு செய்து, இணையதளம் வழியாகத் தேவையான விவரங்களைச் சமா்ப்பிப்பவா்களுக்கு, முதல்வரின் கையொப்பம் அடங்கிய ‘பா்யாவரன் ரக்ஷக்’ மின்னணுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், சுமாா் 20 பசுமைப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது அமைகிறது. இப்பணியை ஆதரிக்கும் வகையில், ‘வன மஹோத்சவ்’ காலத்தில் ‘விருக்ஷரத்’ (மரம் நடும் வாகனங்கள்) பயன்படுத்தப்படும்; பின்னா் இவை குடியிருப்புப் பகுதிகள், வீட்டுவசதிச் சங்கங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இலவச மரக்கன்றுகளை விநியோகிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








