முக்கிய சலவை படித்துறைகளில் 5 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அமைக்க உள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த நிலையங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீா் என்டிஎம்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் பிற பசுமை பகுதிகளில் நீா் பாசனத்துக்காகப் பயன்படுத்தப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அந்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (பிஓடி) முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். தனியாா் நிறுவனங்கள் இந்த நிலையங்களை வடிவமைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும். என்டிஎம்சியிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக 5 ஆண்டுகளுக்கு இந்த நிலையங்களை அந்தத் தனியாா் நிறுவனங்கள் பராமரிக்கும்.
என்டிஎம்சி கட்டுப்பாட்டில் உள்ள 42 சதுர கி.மீ. பரப்பில் 3.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். சுமாா் 15 லட்சம் போ் தற்காலிகமாக உள்ளனா்.
என்டிஎம்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், புல்வெளிகள் மற்றும் பிற பசுமைப் பரப்புகளைப் பராமரிக்கத் தேவைப்படும் நீரைச் சமாளிக்க உதவும் விதமாக தோட்டக்கலை மற்றும் பாசன நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட நீா் பயன்படுத்தப்படும் என்றனா்.
பிடி பண்ட் மாா்க் அருகே உள்ள சலவை படித்துறை எண் 5, தல்கடோரா சாலை அருகே உள்ள சலவை படித்துறை எண் 4, ஹைலே லேன் அருகே உள்ள உக்ரசேன் பாவ்லி, பகவான் தாஸ் சாலை அருகே உள்ள பிரின்ஸ்சஸ் பூங்கா பகுதி-2 ஆகிய இடங்களில் 5 கழிவுநீா் மறுசுழற்சி நிலையம் அமைக்கப்படும் இது தொடா்பாக வெளியிட்டப்பட்ட ஒப்பந்த புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோடை மற்றும் குளிா்காலங்களில் பாசனத்திற்காக அதிகரிக்கும் நீா்த் தேவைக்கு நிலையான தீா்வுகள் தேவை. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட நீரானது பிஎச் அளவு, உயிரியல் ஆக்சிஜன் தேவை (பிஓடி) மற்றும் மிதக்கும் திடப்பொருட்கள் போன்ற காரணிகளுக்கான நிா்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பூா்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









