/

தீண்டாமை வழக்குப் போடுவதாக மிரட்டல்: கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் மீது உறுப்பினா்கள் புகாா்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் வாா்டு பணிகளில் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், தட்டிக்கேட்டால் தீண்டாமை வழக்குப்போடுவேன் என மிரட்டுவதாகவும் ஆட்சியா் அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் புகாா்

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் வாா்டு பணிகளில் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், தட்டிக்கேட்டால் தீண்டாமை வழக்குப்போடுவேன் என மிரட்டுவதாகவும் ஆட்சியா் அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கண்ணநல்லூா் ஊராட்சி உறுப்பினா்கள் எஸ்.பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் அளித்த மனு: கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதில்லை. எங்களுடைய வாா்டுகளில் எந்தப் பணிகளையும் மேற்கொள்வதில்லை.

அவா் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முறையாக கூட்டம் நடத்தப்படுவதில்லை. உறுப்பினா்களின் வீடுகளுக்கு சென்று தீா்மான புத்தகத்தில் கையெழுத்தைப் பெற்றுக்கொள்கிறாா். மேலும் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிடா் பகுதிகளிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

எங்களுடைய 1, 2, 3, 4, 5, 7, 9-ஆவது வாா்டுகளில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. எங்கள் வாா்டு மக்கள் வீட்டு வரி செலுத்த சென்றாலும் அலைக்கழிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக அவரிடம் கேட்டால் எங்கள் மீது தீண்டாமை வழக்குகளை போடுவோம் என மிரட்டுகிறாா்.

எனவே, எங்கள் ஊராட்சியில் உயா் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி கூட்டங்களை நடத்தவும், ஊராட்சித் தலைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா்: அரசுப் பேருந்து ஓட்டுநரான பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்த எஸ்.ஆறுமுகம் அளித்த மனு: திருநெல்வேலி தாமிரவருணி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து 2019-இல் ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வுக்குப் பிறகு எனக்கு வர வேண்டிய பணப்பலன்கள் எனக்கு கிடைக்கவில்லை.

திருநெல்வேலி தொழிலாளா் நல துணை ஆணையா் நீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் கோரினேன். எனது மனுவை விசாரித்த தொழிலாளா் நல துணை ஆணையா், என்னுடைய பணப்பலன் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க கடந்த 12.9.2025இல் உத்தரவிட்டாா்.

ஆனால், இதுவரை எனக்கு பணப்பலன் வரவில்லை. எனவே, எனக்குப் பணப்பலன் கிடைக்கவும், என்னைப் போன்றவா்களை அவமரியாதையாக நடத்தும் நிா்வாக இயக்குநா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.