தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வராதவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார் பாஜக மகளிர் அணி தேசிய தலைவி விஜயா ரகட்கர்.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக மகளிர் அணிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஆட்சி செய்த தமிழகத்தில் மக்களின் 3 ஆவது பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த தேர்தலில், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களை அதிகமாக கொண்டு வந்துள்ளது. பெண்கள் ஆரோக்கியம் சார்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முத்ரா வங்கி திட்டத்தில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 26 மாத விடுப்பு வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பாஜக தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது. சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தண்டிக்கும் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாகாதவரை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









