அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவுக்கு தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த வரையறுக்கப்பட்ட விடுமுறை தொடரவேண்டும் என பாலபிரஜாபதி அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாமிதோப்பு அன்புவனத்தில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அவதாரதின விழாவுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த விடுமுறை அய்யாவழி பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கியது.
இந்நிலையில், வரும் மார்ச் 4-ஆம் தேதி அய்யா வைகுண்டசாமியின் 187-ஆவது அவதார தினவிழா நடைபெற உள்ளது. இந்த நாளை மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில், நிகழாண்டு தமிழக அரசின் விடுமுறை அறிவிப்புப் பட்டியலில் அய்யா வைகுண்டசாமி அவதாரதினம் சேர்க்கப்படவில்லை என்பதோடு, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் கூட இடம்பெறவில்லை. எனவே, அய்யாவழி பக்தர்கள் நலன்கருதி, அய்யா வைகுண்டசாமி அவதார தினத்துக்கு தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பாரம்பரிய நடைமுறைகள் இந்து அறநிலையத் துறை செயல்பாட்டால் மீறப்பட்டதால், பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே, அய்யா வைகுண்டசாமி வழிபாட்டின் புனிதம், தனித்தன்மை, பாரம்பரியம், நம்பிக்கை நடைமுறைகளைப் பாதுகாக்க தனிஆணை பிறப்பிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி ஒருலட்சம் பக்தர்கள் பங்கேற்கும் கூட்டுப் பிரார்த்தனையும், பக்தர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பும் நிகழ்வும் சாமிதோப்பில் நடைபெறும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







