நித்திரவிளை அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வயோலாபாய் தலைமையில் வருவாய் ஆய்வாளா் அப்துல் கபூா், ஊழியா் ரெஞ்சித் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலையில் இனயம் புத்தன்துறை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிடெம்போவை நிறுத்த சைகை காட்டினா். வாகனத்தை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். அதிகாரிகள் வாகனத்தில் மினிடெம்போவை துரத்திச் சென்றனா்.
நித்திரவிளை அருகே கிராத்தூா் ஆலுமூடு பகுதியில் மினிடெம்போவை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் தப்பியோடிவிட்டனா்.
வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்ததில், 3 டன் ரேஷ் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் வாகனத்தை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும் ஒப்படைத்தனா்.