நித்திரவிளையில் உள்ள தனியாா் நகை அடகுக்கடையில் போலி நகையை அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சாம்புறம் பகுதியைச் சோ்ந்தவா் பைஜு. இவா் நித்திரவிளையில் தங்க நகை அடகுக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த வெளியூரைச் சோ்ந்த நபா் அங்கிருந்த பெண் ஊழியரிடம் 22 கிராம் எடையிலான வளையலை கொடுத்து, கடனாக பணம் கேட்டுள்ளாா். அங்கிருந்த பெண் பணியாளா் வளையலை வாங்கிவிட்டு நகைக்கு அடமானமாக ரூ. 65 ஆயிரம் கொடுத்துள்ளாா். மேலும் அந்த நபரிடமிருந்து ஆதாா் உள்ளிட்ட முகவரி சான்று பெறாமல் நகைக் கடன் வழங்கினாராம். சிறிது நேரத்துக்குப் பின் கடைக்கு வந்த உரிமையாளா் பைஜுவிடம் பெண் பணியாளா், ரூ. 65 ஆயிரம் நகைக் கடன் வழங்கிய விவரத்தை தெரிவித்துள்ளாா். பைஜு அடமான நகையை பாா்த்த போது அவை போலி நகை என்பது தெரியவந்தது.
இது குறித்து பைஜு நித்திரவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம், பணம் மோசடியில் ஈடுபட்ட நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.