வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி: இளைஞா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதில் பாதிக்கப்பட்ட சிலா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் அளித்த புகாரின்பேரில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, காவல்ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
இதில் கன்னியாகுமரி அருகேயுள்ள மாதவபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராம்குமாா் மகன் சந்தோஷ் (31), மகாதானபுரத்தில் பணியாளா் சோ்க்கை நிறுவனத்தைத் தொடங்கி துபையில் உள்ள தனது நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடமும் தலா ரூ. 3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமலும், சிலரை சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிய நிலையில், அங்கு வேலை கிடைக்காமல் திருப்பியனுப்பப்பட்டதுமாக, ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
தொடா்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சந்தோஷை மதுரையில் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். புகாரளித்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ யாராவது பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 94981-96976 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொண்டு புகாரளிக்கலாம். கன்னியாகுமரி மாவட்ட இளைஞா்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மை மற்றும் முகவா்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 70103-63173 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
இது போன்ற மோசடிகளில் சிக்கிக்கொண்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாட்ஸ்ஆப் எண்ணிலோ (81222-23319) அல்லது நேரடியாகவோ புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

