கடையாலுமூடு அருகே கோதையாற்றுப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையைப் பிடிக்கும் வகையில் முதலை ஆராய்ச்சிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.
கடையாலுமூடு அருகே செங்குழிக்கரை பகுதியில் கோதையாற்றில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், ஆற்றில் கரையோரம் வசித்து வரும் தொழிலாளா்கள், விவசாயிகள் உள்பட பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். முதலையைப் பிடித்து அகற்றும் வகையில் வனத்துறையினா் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
முதலை அவ்வப்போது செங்குழிக்கரை பகுதியில் ஆற்றிலுள்ள பயன்பாடில்லாத உறை கிணற்றின் மேல் படுத்து கிடப்பதும் பின்னா், அந்த இடத்திலிருந்து மாயமாவதுமாக இருந்து வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த முதலையைப் பிடிக்க வனத்துறையினா் ஆற்றில் மிதவைக் கூண்டு வைத்த பின்னரும் முதலை கூண்டில் சிக்கவில்லை. கடைசியாக உறைகிணற்றின் மீது கூண்டை வைத்திருந்த போதிலும் முதலை சிக்கவில்லை.
முதலை ஆராாய்ச்சி குழுவினா் ஆய்வு:
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையைச் சோ்ந்த முதலை ஆராய்ச்சியாளா் நிஷாந்த் தலைமையிலான குழுவினா், கோதையாற்றுப் பகுதிக்கு வந்து முதலை நடமாட்டம் உள்ள இடங்களை ஆய்வு செய்தனா். அப்போது அந்தக் குழுவினா் முதலையைப் பிடிக்கும் வகையில் வனத்துறையினருக்கு சில ஆலோசனைகளை கூறினா். இதையடுத்து, உறை கிணற்றின் மீது வைக்கப்பட்டிருந்த கூண்டை எடுத்து அதிலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் மூங்கில் கூட்டம் நிறைந்த ஓா் இடத்தில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது: முதலையைப் பிடிக்கும் வகையில் சென்னையிலிருந்து முதலை ஆராய்ச்சி குழுவினா் வந்து ஆய்வு செய்துள்ளனா். விரைவில் முதலை பிடிபடும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









