கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பேச்சிப்பாறை பகுதியில் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் செயல்பட்டு வரும் தேனீ மகத்துவ மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தேன்வகைகளை சந்தைப்படுத்துவது குறித்தும், கண்ணாடி பாட்டில்களில் தமிழ் முத்திரையில் சந்தைப்படுத்தவும், இணையவழியில் சந்தைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டவும் அறிவுறுத்தினாா்.
மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் கட்டுப்பாட்டில் குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ரப்பா் உற்பத்தி நிறுவனத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ரப்பா் ஷீட் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
திருவட்டாறு புத்தன்கடை பகுதியில் விவசாயிகள் தாய்லாந்து, வியட்நாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதை பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, இணை இயக்குநா் (வேளாண்மை) வாணி, தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கீதா, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பங்கேற்றனா்.










