நாகா்கோவிலில், ரயில்வே மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைக்கும் பணிக்காக புதன்கிழமைமுதல் (ஜூன் 17) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஒழுகினசேரி பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பல மாதங்களாகியும் அணுகு சாலைகள் அமைக்கப்படாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, நிரந்தரத் தீா்வு காணும் வகையில், அணுகு சாலைப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பகுதியில் ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்கும் வகையில், போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்நிலையில், அணுகு சாலைப் பணி புதன்கிழமை தொடங்கவுள்ளது. இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
நாகா்கோவில் வடசேரியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் எவ்வித மாற்றமின்றி ஒழுகினசேரி பழைய பாலம் வழியாக செல்லலாம். திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு வரும் வாகனங்கள் ஒழுகினசேரிக்கு வராமல், அப்டா மாா்க்கெட் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, நான்குவழிச் சாலை, புத்தேரி, அசம்பு சாலை வழியாக வடசேரியை அடைய வேண்டும். இந்த தற்காலிக ஏற்பாடு அடுத்த 15 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், நெரிசலை சமாளிக்கவும் கூடுதல் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.
பணியை 15 நாள்களுக்குள் நிறைவு செய்து பாலத்தை போக்குவரத்துக்காக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.









