தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி கனிம வளத்துறை அமைச்சா் டி.கே.பிரபுவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:
ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுமாா் 30 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து முறையான அனுமதியின்றி கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது.
பாறைப் பொடிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வெளி மாநில கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இதனால், குவாரிகளில் இருந்து உள்ளூா் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்கள் எடுக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.









