தென்காசியில் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் பணியை நீதிபதிகள் புதன்கிழமை பார்வையிட்டனர்.
தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை இயங்கிவந்தது. புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட தொடங்கியது முதல் இங்கு செயல்பட்டு வந்த அனைத்து அலுவலகங்களும் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து இந்த கட்டடம் பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில், தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க பழைய அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரூ. 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்திலுள்ள கட்டடங்களை இடிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணிகளை தென்காசி சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் சார்பு நீதிபதி திருவேங்கட சீனிவாசன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், நீதித்துறை நடுவர் திரிவேணி, அரசு வழக்குரைஞர்கள் கார்த்திக்குமார், ராமசந்திரன், சுப்பையா ஆகியோர் பார்வையிட்டனர். பார் அசோசியேசன் தலைவர் செல்லத்துரை பாண்டியன்,செயலர் மாரியப்பன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜன், செயலர் புகழேந்தி, வழக்குரைஞர்கள் வனஜா, தாகிராபேகம், உதவிச் செயற்பொறியாளர் பிரேமலதா, உதவிப் பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.