கடையநல்லூர் அருகே தண்ணீரைத் தேடி அலைந்து விபத்தில் சிக்கும் மான்கள்
கடையநல்லூர் அருகே தண்ணீருக்காக அலைந்து விபத்தில் சிக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


கடையநல்லூர் அருகே தண்ணீருக்காக அலைந்து விபத்தில் சிக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடையநல்லூர், செங்கோட்டை சாலையில் காசிதர்மம் அரசுக் கல்லூரி அருகே சிறிய மலை உள்ளது. இந்த மலையின் நீட்சி மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வரை உள்ளது.
இந்த மலையில் மான், முயல், பன்றிகள் வசித்து வருகின்றன. பருவ மழை பொய்த்து கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள அனைத்து குளங்களும் வறண்டு விட்டன. மேலும், கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைக்கட்டுகளும் நீரின்றி வறண்டு விட்டன.
இதே நிலைதான் மலைகளிலும் உள்ளது. அங்குள்ள தடாகங்கள் நீரின்றி வறண்ட நிலையில், தண்ணீரைத் தேடி மலையை விட்டு இறங்கும் நிலைக்கு மான் உள்ளிட்ட விலங்குகள் தள்ளப்பட்டு விட்டன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின்றி, யானைகள் தண்ணீருக்காக மலையை விட்டு இறங்கி அடிவாரப் பகுதிகளிலுள்ள தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வரும் நிலையில், தண்ணீருக்காக மலையை விட்டு இறங்கும் மான்கள் விபத்தில் சிக்கி இறந்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதிகை இயற்கை சங்கத்தின் நிறுவனர், சேக்மைதீன் கூறியது: காசிதர்மம் சாலையில் அமைந்துள்ள சமூக வனக்காட்டில் (சிறிய மலை), மான்கள் அதிகம் உள்ளன. முயல், பன்றி போன்ற விலங்குகளும் இங்கு உள்ளன. ஏற்கெனவே மலைப் பகுதி சுருங்கி விட்ட நிலையில், விலங்குகள் பாதுகாப்பற்ற சூழலில் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், மலைப்பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டதால், மான் உள்ளிட்ட விலங்குகள் மலையை விட்டு இறங்கி வருவது தொடர்ந்து வருகிறது. அப்படி வரும் விலங்குகள் தென்காசி-மதுரை சாலையிலும், கடையநல்லூர்,செங்கோட்டை சாலையிலும் விபத்தில் சிக்கி இறக்கின்றன.
கடந்த ஒரு மாத காலத்தில் பல விலங்குகள் காயமடைந்துள்ளன. சில இறந்துள்ளன.
எனவே, அப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக பெரிய தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். இதற்கு மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வேகத்தடை: மேலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடையநல்லூர் ,செங்கோட்டை சாலையில் மலைப்பகுதி அடிவாரத்தில் ஆங்காங்கே வேகத்தடைகளை அமைக்க வேண்டும். மேலும், சாலையோரத்தில் விலங்குகள் கவனம் என்ற எச்சரிக்கை பலகையையும் வைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பணை: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பில் யானைகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...